அமித்ஷா - கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். பின்னர், அந்த கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
இவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று (ஜூலை 08) மாலை விமானத்தில் புறப்பட்ட ஆளுநர், டெல்லி சென்றடைந்தார். அங்கு ஏழு நாட்கள் தங்கும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டில்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் கவர்னர் என்பவர் அரசியல்வாதி இல்லை. கவர்னர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டும் செய்ய வேண்டும் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.