சத்தியமா சும்மா விடமாட்டோம் : இந்தியாவிற்கு அல்கொய்தா அமைப்பு மிரட்டல்..!

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
ஆனால் 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பான அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அல்-கொய்தாவின் இந்திய துணைக் கண்டக் கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அஸ்-சஹாப் மீடியா வழியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மே 6, 2025 அன்று இரவு, இந்தியாவின் 'காவி அரசாங்கம்' பாகிஸ்தானில் ஆறு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக மசூதிகள் மற்றும் குடியிருப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் பல முஸ்லிம்கள் தியாகிகள் ஆகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள், அவனிடம் திரும்புவோம். அல்லாஹ் தியாகிகளுக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை வழங்குவானாக. காயமடைந்தவர்களை விரைவில் குணப்படுத்துவானாக ஆமென். இந்தத் தாக்குதல் காவி அரசாங்கத்தின் குற்றங்களின் பட்டியலில் மற்றொரு கருப்பு அத்தியாயம் ஆகும்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தியாவின் போர் ஒன்றும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் காஷ்மீரிலும் முஸ்லிம்கள் ஏராளமான ஒடுக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். மோடி அரசின் இராணுவம், அரசியல், கலாச்சார மற்றும் ஊடக வழிமுறைகள் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒழிக்க முயற்சி செய்கிறது.
இது முஸ்லிம்களுக்கு எதிரான இந்தியாவின் ஜிஹாத் என்று நாங்கள் கூறுகிறோம். அல்லாஹ்வின் பெயரை உயர்த்துவது, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பது மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது நமது கடமை. இப்போது துணைக்கண்டத்தின் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியுடன் முஸ்லிம்கள் மீதான அனைத்து அட்டூழியங்களுக்கும் பழிவாங்கும் வரை போராடுவோம் என சத்தியம் செய்கிறோம்." இவ்வாறு அல்கொய்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.