மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்பு !!
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உள்பட மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் , 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக புதிய உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கையா நாயுடு, புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார், பா.ஜ.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு- ஜோதிர் ஆத்திய சிந்தியா உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் திரு.தம்பிதுரை, தா.மா.க தலைவர் திரு. ஜி.கே.வாசன் ஆகிய 3 பேரும் தமிழிலேயே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Newsm.in