எனது கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை - அரவிந்த் கெஜ்ரிவால்..!

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று 11 மணி நேரம் சோதனை நடத்தியபின் அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே சிறையில் உள்ளார். இதில் வரும் ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்குப் போகிறது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " எனது கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை. ஏஜென்சிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஆனால், இந்த விசாரணையில் இருந்து எதுவும் வெளிவரவில்லை. இது அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எல்லோரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்துக்கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையாது” என்றார்.