வாகன ஓட்டிகளே அலெர்ட்..! அதிவேகமாக ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ecab7cefb741f34b6a6bf5d6a5b97f14.jpg?width=836&height=470&resizemode=4)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கடைவீதிகளில் துணிகள் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும் என்பதால் அத்தகைய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.