1. Home
  2. தமிழ்நாடு

ஏர் இந்தியா விமான விபத்து: நாச வேலையும் காரணமாக இருக்கலாம்... மத்திய அமைச்சர் பகீர் தகவல்

1

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி கடந்த 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. 

விபத்துக்கு காரணமான ஏர் இந்தியா விமானத்திலிருந்து கருப்பு பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது இந்த கருப்பு பெட்டியை முழுமையாக ஆராய்வதன் மூலம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு நாச வேலை கூட காரணமாக இருக்கலாம் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவென அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கு நாச வேலையும் காரணமாக கூட இருக்கலாம். அந்த கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மேலும் விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமராக்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

ஏர் இந்தியா விமான விபத்தின் போது விமானத்திலிருந்து 2 என்ஜின்களும் பழுதடைந்து இருக்கின்றன. இது மிகவும் அரிதான சம்பவம். பொதுவாக 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுது ஏற்படுவது மிகவும் அரிதானது. கருப்பு பெட்டியை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் முக்கிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு பெட்டி ஆய்வறிக்கை வெளியானதும் விமான விபத்துக்கு காரணம் எஞ்சின் பிரச்சனையா அல்லது எரிபொருள் சப்ளை வினியோகமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது முழுமையாக தெரிய வரும். ஆகையால் இந்த நேரத்தில் தீர்க்கமாக எதையும் சொல்லி விட முடியாது.

கருப்பு பெட்டி ஆய்வறிக்கை வெளிவந்த பின்னர் தான் உறுதியான முடிவு எடுக்க முடியும். அதற்கு இன்னும் 3 மாதம் வரை கால அவகாசம் எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் முரளிதர் தெரிவித்தார்.


மேலும் கருப்பு பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கருப்பு பெட்டியை எங்கேயும் அனுப்ப மாட்டோம். இங்கே வைத்துதான் விசாரணை நடத்துவோம்" என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

மேலும், விமான பயணத்தை பொருத்தமட்டில், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கேட்டுக் கொண்ட அவர், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

Trending News

Latest News

You May Like