1. Home
  2. தமிழ்நாடு

உயிர் தப்பிய 179 பேர் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ..!

1

கடந்த சனிக்கிழமை இரவு புனே நகரிலிருந்து பெங்களூரு வழியாக கொச்சி நகருக்கு IX-1132 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. பெங்களூரில் இறங்கி, மீண்டும் கிளம்பி, கொச்சி நோக்கிச் சென்றபோது அவ்விமானத்தில் தீப்பிடித்தது.இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அதன் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, தீப்பிடித்ததற்கான காரணம் கண்டறியப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய பத்து நிமிடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீப்பிடித்ததை அடுத்து, அவ்விமானம் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.இதனால் அதிலிருந்த 179 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் அவர்கள் 13 மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

“இரவு 10.50 மணிக்கு விமானம் பெங்களூரிலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 11 மணியளவில் இயந்திரம் தீப்பற்றியதைச் சன்னல் வழியாகக் கண்டோம். இதனையடுத்து, 11.15 மணிக்கு விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது,” என்று அதில் பயணம் செய்த பியானோ தாமஸ் என்பவர் கூறினார்.

இதனையடுத்து, “முழு அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் விரைவாகத் தீ அணைக்கப்பட்டது,” என்று பெங்களூரு அனைத்துலக விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில், 137 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like