அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு!!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் முக்கிய ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
newstm.in