அ.தி.மு.க., பா.ஜ.க. இப்போது நடத்துவது உள்ளே வெளியே விளையாட்டு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c5f40722dfa0078725835bd0e4995820.jpg?width=836&height=470&resizemode=4)
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இந்திய நாட்டில் விரைவில் விடியல் பிறக்கும்; தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியாவிலும் விடியல் பிறக்கும், தி.மு.க. இளைஞரணி படையை பார்த்த பின்னர் எனக்கு 20 வயது குறைந்தது போல் உள்ளது. எந்த கொம்பனாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
நான் முதலமைச்சராக மக்கள் தொண்டாற்ற அடித்தளமிட்டது இளைஞரணி; இளைஞரணி என் தாய் வீடு; என்னை வளர்த்த, என்னை உருவாக்கிய இடம். நான் சுறுசுறுப்பாக இயங்க முக்கிய காரணம் என்னை சுற்றி இளைஞர்கள் இருந்தது தான்; அ.தி.மு.க., பா.ஜ.க. இப்போது நடத்துவது உள்ளே, வெளியே விளையாட்டு; எடப்பாடி பழனிசாமியின் பகல் வேஷத்தை நம்ப அ.தி.மு.க.வினரே தயாராக இல்லை. மாநிலங்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். வெள்ள நிவாரண நிதியை தற்போது வரை மத்திய அரசு தரவில்லை.
மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரமாக மாநிலங்களை மாற்றிவிட்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் கோரிக்கை. அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி வேண்டும் என்பதே தி.மு.க.வின் கோரிக்கை. மாநில உரிமைகளை வழங்கும் சிறப்பான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியா கூட்டணி தரும்.
இளைஞரணியினர் பொறுப்புக்கு வர வேண்டும்; நமக்கு இப்போது வந்துள்ள ஆபத்தைத் தடுக்கவே தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற்றுள்ளது. தமிழகத்திற்கும் வளத்திற்கும், நலத்திற்கும் இப்போது ஆபத்து வந்துள்ளது. பிரதமர் மோடிக்கு 2 முறையும் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை; இம்முறையும் வாக்களிக்கமாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.