மறுபடியுமா ? வங்கிக் கணக்கில் திடீரென ரூ.753 கோடி வரவு..!

பொதுமக்கள்தான் வங்கி பரிவர்த்தனைகளின் போது சில நேரங்களில் தவறுதலாகச் சம்பந்தமில்லாதவர்களுக்குப் பணம் அனுப்பிவிடுவது, எப்போதாவது நடக்கும் நிகழ்வு. ஆனால், வங்கிகள் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் தொகையைத் தவறுதலாகச் சாமானியர்களின் கணக்குக்கு மாற்றுவதும், அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்குதல் போன்றவை பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் முஹம்மது இத்ரீஸ், மருந்து கடையில் பணியாற்றி வருகிறார். இவரது கொடாக் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் செல்போனில் வந்த மெசேஜைத் தொடர்ந்து, தனது வங்கி இருப்பை சோதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது உறுதியாகியிருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், அவரின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டிருக்கிறது.இதனால், அவரது தேவைக்கானப் பணத்தைக் கூட எடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
இதற்கு முன்னர், நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்குக்குத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.