மீண்டும் மீண்டுமா..? நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்..!

டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 900 அடி உயரத்துக்கு கீழே இறங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில், இருப்பினும் அதனை சமாளித்து அந்த விமானத்தை விமானிகள் பத்திரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தரையிறக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கி உள்ளது. ஏர் இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு சம்மன் அனுப்பியதுடன், விசாரணை முடியும் வரை அந்த இரண்டு விமானிகளையும் பணியில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த ஜூன் 14ம் தேதியன்று, தலைநகர் டில்லியில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், ' Don't Sink' என்ற எச்சரிக்கையை அனுப்பியது. அப்போது மோசமான வானிலை இருந்தாலும், நிலைமையை சமாளித்து சாதூர்யமாக செயல்பட்ட விமானிகள், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பயணத்தை தொடர்ந்ததுடன் 9 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணித்து வியன்னாவில் தரையிறக்கினர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமானிகள் தகவல் தெரிவித்ததுடன், அதனை டி.ஜி.சி.ஏ.,விடம் தெரிவித்துவிட்டோம். விமானத்தில் பதிவான தகவல்களை எடுத்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடியும் வரை, விமானிகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.