மறுபடியுமா..! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது, வங்கக்கடலில் டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது.
வங்கக்கடலில் டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும். தமிழகத்தில் இன்று (டிச.,13) மற்றும் டிசம்பர் 17ம் தேதி ஆகிய இரு நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 16, 17, 18ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.