தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் விடுமுறை : முதல்வர் ரங்கசாமி உத்தரவு

நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை கொண்டாடி விட்டு அடுத்தநாளே அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 13-ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.