1. Home
  2. தமிழ்நாடு

நீண்ட இழுபறிக்கு பிறகு சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்பு..!

1

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.  இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. 

இந்நிலையில்,  சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி என 2 இடங்களில் வாக்கு இருப்பதால்,  செல்வகணபதியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அதி.மு.க. சார்பாக புகார் எழுந்த நிலையில்,  அவரது வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று,  பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனது, கலர் தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று அதிலிருந்து விடுதலை ஆனது தொடர்பான ஆவணங்களை செல்வகணபதி சமர்ப்பிக்கவில்லை என்று கூறி,  மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், செல்வகணவதியின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது.

தொடர்ந்து மற்றவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதையடுத்து 2 மணிக்கு மீண்டும் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அப்போது அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு தி.மு.க. வேட்பாளர் சார்பில் வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.

மேற்கு தொகுதியில் உள்ள வாக்குரிமையை நீக்குவதற்கான படிவம் ஏற்கனவே வழங்கி விட்டதாகவும், நீக்காததற்கு வேட்பாளர் பொறுப்பாகாக மாட்டார் எனவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கொடுத்த புகார் மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். இதையடுத்து நீண்ட இழுப்பறிக்கு பிறகு தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் மனுவை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். 

Trending News

Latest News

You May Like