நடிகை வனிதாவின் 3 - வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் !!
நடிகர் விஜய்க்கு ஜோடியாக , சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் புகழடைந்தார். தந்தை விஜயகுமாருடனான சண்டை காரணமாக இரு மகள்களுடன் தனியே வசித்து வந்த அவர் , பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலிகிராமம், நேரு நகரில் வசித்து வரும் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் அளித்துள்ள புகார் மனுவில் ; எனது கணவர் பீட்டர் பாலுக்கும் எனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். இந்நிலையில் எனது கணவர் என்னை விட்டு விட்டு சட்டவிரோதமாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனது கணவர் என்னை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை.
அவருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதனால் அவரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனு கடந்த 19ம் தேதியே போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.
அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று வனிதா – பீட்டர் பால் திருமணம் நடைபெற்று விட்டது. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்துள்ளதால் பீட்டர் பால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in