'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிப் பேசிய நடிகை சமீரா ரெட்டி..!
பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது.இம்மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உடல்நலன் குறித்த குறிப்புகள் எழுதி மருத்துவ அட்டை வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் தொடர் சிகிச்சைகள் பெற பயனுள்ளதாக அமையும்.
இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பல்வேறு விதமான மருத்துவ சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம், நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 10 லட்சம் மக்களை சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, தரமான மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த முகாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறுகிறது. அடுத்த ஓராண்டு காலத்திற்குப் பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் கிடைக்கும். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிப் பேசியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. இந்த திட்டம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.
நடிகை சமீரா ரெட்டி பேசுகையில், "8 -9 வருடங்களுக்கு முன்பு எனக்கு Alopecia Areata நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் எனது உடல்நலம் குறித்து மிகவும் கவலைப்பட ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள், பாதிப்புகள் அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கியமானது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த முகாம்களில் மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம் என அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது பல உயிர்களைக் காக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
.png)