நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வையே இல்லை - வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்..!

கடந்த மார்ச் மாதம் சென்னையில் தவெக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த வாரம் கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு நடத்தினார் விஜய். தனது அனைத்து பேச்சுகளிலும் திமுகவை விஜய் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
விஜய் மீது பலரும் முன்வைக்கும் விமர்சனம் அவர் களத்திற்கு இதுவரை வரவில்லை என்பதுதான். சுமார் ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், மக்களை சந்திக்கவே இல்லை என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் அரசியல் வருகையை நடிகர் பிரகாஷ் ராஜும் சாடியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரகாஷ் ராஜ், “நடிகர் விஜய், பவன் கல்யாண் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். இருவருடனும் 20 வருடங்களாக சினிமாவில் பயணித்துள்ளேன். இந்த 20 வருடங்களில் விஜய், பவன் கல்யாண் இருவருடனும் அரசியல் பற்றி ஒரு தீவிரமான விவாதம் கூட நடத்தியதில்லை.
இருவரும் நடிகர்கள். நடிகராக கிடைத்த பிரபலத்தின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரிடமிருந்தும் தெளிவான பார்வை அல்லது பிரச்சினைகள் பற்றிய புரிதலை நான் காணவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “விஜய்யை பவன் கல்யாண் உடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். பிரபலமானவர்கள் என்றால் அவர்கள் கையில் ஆட்சியை கொடுத்துவிட முடியுமா? நடிகர்கள் அரசியல் வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி எனக் கூறி சீட் கிடைக்கிறது” என்றும் விமர்சனம் செய்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். பாஜக மீதும் மத்திய அரசின் கொள்கைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.