நடிகர் விஜயால் தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது - ரஜினி சகோதரர் சத்திய நாராயண ராவ்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயண ராவ், "மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தேன். தரிசனம் சிறப்பாக இருந்தது. ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருவதாக செய்தி வந்துள்ளது. அது போன்று செய்யக்கூடாது. அது தவறு. ரஜினியை சாமியாக நினைத்து பூஜித்தால் சாமியே அவருக்கு நல்லது செய்யட்டும்.
விஜய் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசன் முயற்சி செய்தது போல விஜயும் முயற்சி செய்யட்டும். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. கட்சி தொடங்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், கட்சி தொடங்கி எந்த பிரயோஜனமும் இல்லை, ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார் முயற்சி செய்யட்டும், தாமும் அரசியலுக்கு வர வேண்டுமென மனதில் நினைத்து ஆசைப்பட்டு வந்திருக்கிறார். இனி என்ன செய்வார் என்று தெரியவில்லை.
நடிகர் விஜயகாந்தை ஏற்றுக்கொண்டது போன்று விஜயை ஏற்றுக்கொள்வார்களா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. வீண் சிரமம் அவருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அரசியலில் இருந்து அவரை பின்வாங்கும்படி செய்தியாளர்கள்தான் அவரிடம் சொல்ல வேண்டும்.
விஜய் சொல்வது போல ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதும் ஒரு முயற்சிதான். ஆனால் அதன் காரணமாக வெற்றி பெற முடியாது கஷ்டம். தற்போது வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆகையால் அது போன்ற கேள்விகளை இனிமேல் தவிர்த்து விடுங்கள்," எனத் தெரிவித்தார்.
.