நடிகர் சூர்யாவுக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு.. உரிமை உள்ளது என அறிக்கை !
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சூர்யா தனது அறிக்கையில், உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பானுமதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா கூறிய கருத்துகள் மக்கள் பலரிடமும் இருப்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள், தீர்ப்புகள் குறித்து கருத்துச் சொல்ல உரிமை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு உட்பட்டு, நேர்மையான, வெளிப்படையான, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விமர்சனமாக சூர்யாவின் கருத்துகளை எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டது தவறு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா மீதும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல, சூர்யாவின் கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
newstm.in