தாலி, பூணூலை அகற்ற சொன்ன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹெச்.ராஜா..!

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களிடம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டப்பட்டன. மாணவி ஒருவரின் சட்டை பட்டன்களை நீக்கியது, மாணவி ஒருவர் தாலியை கழற்றிவிட்டு வந்து தேர்வு எழுதச் சொன்னது என பல விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் கண்டனங்கள் குவிந்துள்ளன.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “ நாடு முழுவதும் நேற்றைய தினம் நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் ஒருசில இடங்களில் தேர்வு எழுத வந்த திருமணமான பெண்களின் தாலியை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என்று கூறி தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் மாணவர்களின் பூணூலை அகற்றச் சொல்லி அதன் பிறகே தேர்வெழுத அதிகாரிகள் அனுமதித்ததாகவும் வந்த தகவல்கள் வருத்தமளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களின் மன உறுதியை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடும், நமது பாரம்பரிய, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை அழிக்க வேண்டும், அவமதிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு சில அதிகாரிகள் நீட் தேர்வு மையங்களில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நடைமுறைப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இதேபோல் சில இடங்களில் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஹெச்.ராஜா, விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நீட் தேர்வு மையங்களில் சில அதிகாரிகளால் நடைமுறைபடுத்தப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு நீட் தேர்வுக்கு எதிராக நீட் எதிர்ப்பு கும்பல் பிரச்சாரம் செய்வதும், நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.