தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க ஆம் ஆத்மி கோரிக்கை!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் எனஆம்ஆத்மிகட்சியின் தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கொள்கைக்கு முற்றிலும் முரணானது ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் சமப்படுத்தி ஒப்பிட்டு தேர்வில் பார்ப்பது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது வரவேற்கத்தக்கது.
இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு தான் என்பது ஞாயமானதல்ல என்பதை உணர்ந்து நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அறிக்கையாக அளித்தது.
தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் நீதியரசர் பி.கலையரசன் பரிந்துரைத்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்ட பின் இந்த நடப்பு ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும்.
மேலும், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 -ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.
ஆகையால் காலம் தாழ்த்தாமல், உடனே தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.