1. Home
  2. தமிழ்நாடு

விநோத சம்பவம்..!அரசு அலுவலகத்தில் நெகட்டிவ் எனர்ஜி..?

1

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக பிந்து என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் 28 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே இந்த அலுவலகத்தில் அடிக்கடி மோசமான சம்பவங்கள் நடப்பதாகவும், தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து விலகி விடுவதாகவும் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிந்து குறை கூறி வந்துள்ளார். இதற்கெல்லாம் காரணம், அலுவலகம் முழுவதும் நிறைந்துள்ள நெகடிவ் எனர்ஜி தான் எனவும் அவர் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அலுவலக நேரம் முடியும் முன்பாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளதாகவும், அனைவரும் அதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பிந்து அறிவித்துள்ளார். இதையடுத்து பைபிள் மற்றும் இரும்பு கம்பி ஒன்றுடன் வந்த இளைஞர் ஒருவர் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

அரசு அலுவலகத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்து சிலரை அதிகாரி பிந்து பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் இந்த பிரார்த்தனை சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர்கள், பிந்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா, துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நிரூபிக்கப்பட்டால், பிந்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like