நூதன மோசடி..! மோடியின் முதன்மைச் செயலாளர் மகள், மருமகன் எனக்கூறி ஏமாற்றிய தம்பதி..!
மோடியின் முதன்மைச் செயலாளரான பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் போல் நடித்து, பல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தம்பதியை ஒடிசா போலீசார் கைது செய்தனர்.
சுரங்க உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தத் தம்பதியைக் காவலர் கைது செய்துள்ளனர்.
38 வயதான ஹன்சிதா அபிலிப்சா மற்றும் அவரது கணவர் எனக் கூறப்படும் அனில் மொஹந்தி ஆகியோர் ஒடிசாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.
புவனேஸ்வர் நகரில் இந்த ‘தம்பதி’ அலுவலகம் நடத்தி வந்துள்ளனர். டிஜிட்டல் முறையில் பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல இவர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களைக் காட்டி பல அரசியல்வாதிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன்மூலம் அரசு டெண்டர்களை வாங்கி தருவதாகக் கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்தத் தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.