வெடித்த புது சர்ச்சை..! அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை?

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் பாமக தலைவராக தானே இனி பொறுப்பு வகிப்பேன் எனவும் தற்போது பாமக தலைவராக உள்ள தனது மகன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் எனவும் தெரிவித்தார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனராக இனி நான் தான் செயல்படுவேன் என்றும் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமதாஸ் இந்த முடிவை கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அன்புமணி ராமதாசை ஆலோசித்துதான் அறிவித்தாரா என்றும் கேள்விகள் எழுந்தன. ராமதாஸின் இந்த அறிவிப்பு குறித்து அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாமக விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது எனவும் கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டி மே 28ஆம் தேதி நடந்த சிறப்பு பொது குழுவில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்பட்டார்.
தலைவரை நியமிக்கவும் நீக்கவும் பாமக பொதுக்குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் ராமதாஸின் இந்த அறிவிப்பு செல்லாது எனவும் கூறப்படுகிறது. மேலும் தன்னிச்சையான எந்த அறிவிப்பையும் வெளியிடுவதற்கு பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என்றும் ராமதாஸ் நீக்கினாலும் கட்சி விதிகளின் அடிப்படையில் தற்போது பாமக தலைவர் அன்புமணி தான் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக விதிகளின் அடிப்படையில் அன்புமணியை நீக்கிய ராமதாஸின் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏற்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸின் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றார். அவர் மவுனம் கலைத்தால் மட்டுமே பாமகவுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வரும்.