இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு எமனாக மாறிய மாடு.. கணவன் கண்முன்னே மனைவி பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்னையா (52). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள் (48). இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) காலை 5 மணியளவில் திருமுடிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி இருவரும் சென்று உள்ளனர்.
அப்போது இருவரும் அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் கும்பலாக நின்று கொண்டிருந்த மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் நாகம்மாள் சாலையின் வலது புறத்தில் விழுந்து உள்ளார். அந்த நேரம் அங்கு எதிர்புறமாக இருந்து வந்த தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக நாகம்மாள் தலையின் மீது ஏறி இறங்கியது.
இதில் நாகம்மாள் தலை துண்டிக்கப்பட்டு லாரியின் டயரில் சிக்கிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே மனைவி நாகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். லாரி மோதி, மனைவி தலை துண்டாகி இறந்ததைப் பார்த்த கணவர், மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழும் காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இந்த பகுதியில் சாலையோரங்களில் அடிக்கடி மாடுகள் படுத்து கிடப்பதும், சுற்றுவதும் அதிக அளவில் உள்ளது. இது பற்றி வாகன ஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த சாலையில் குறுக்கே செல்லும் மாடுகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதனை தடுக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற விபத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.