டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் ஒரு வங்கி அதிகாரி..?
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் டெல்லியின் ராஜீவ் சவுக் மற்றும் படேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்படட்து. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ” கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பாஜவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. கேஜ்ரிவால் மீது கொடூர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருகிறது.
இந்த சதித்திட்டம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது. ராஜீவ் சவுக் மற்றும் படேல் நகர் மெட்ரோ நிலையங்களின் உள்பக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவை வெறுப்பு மற்றும் பழிக்குப்பழி என்பதில் மூழ்கியுள்ளதால், கேஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பிரதமர் அலுவலகம், பாஜக, மோடி பொறுப்பு என்பதை அரசு, நிர்வாகம், தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதியதாக அங்கித் கோயல் என்பவரை டெல்லி போலீஸார் இன்று கைது செயதுள்ளனர்.
அத்துடன் மெட்ரோ ரயில் நிலையங்களில் அங்கித் கோயல், வாசகம் எழுதும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அங்கித் கோயல் உயர்கல்வி கற்றவர் என்றும், வங்கியில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.