சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் மனசாட்சியாகவும் இருக்கிறார்.
மேலும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க வேண்டும். தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.
வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்த 480 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகையை மாநில அரசு விரைவில் வழங்கும்” என்று தெரிவித்தார்.