மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலுக்கான மூன்று விருதுகள்..!
மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமாருக்கு 2012, 2013 மற்றும் 2014 என தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு சிறந்த பாடலுக்கான தமிழக அரசின் விருது வழங்கப்படவுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் - நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுபவர்களின் விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு சூழல்களால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2009 - 2014-ம் ஆண்டில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நாளை (செப்.4-ம் தேதி) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில், தொடர்ச்சியாக 3 வருடங்கள் சிறந்த பாடலாசிரியருக்கான விருது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2012-ம் ஆண்டில் பல படங்கள், 2013-ல் ‘தங்கமீன்கள்’, 2014-ல் ‘சைவம்’ திரைப்படம் என அடுத்தடுத்து மூன்று விருதுகள் அவருக்கு வழங்கப்படவிருக்கிறது.