போலி சாமியார் பேச்சை கேட்டு 3 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை!?
தொழில் நஷ்டத்திற்குப் பரிகாரம் செய்வதாகக் கூறி பெற்ற குழந்தையைத் தந்தையே பூஜை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பேரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால், யாமினி தம்பதிக்கு மூன்று வயதில் புனர்விகா மற்றும் பூர்விகா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொக்லைன் இயந்திரம் தொழிலில் வேணுகோபாலுக்கு நஷ்டம் ஏற்பட்டது. வீட்டில் யாரோ சூனியம் வைத்ததால்தான் தான் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நினைத்துள்ளார்.
மேலும் அவருக்குத் தெரிந்த சாமியார் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, நரபலி கொடுத்தால் நிலைமை சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் பூஜை செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நினைத்துள்ளார்.
இதன்படி வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார். அப்போது குழந்தைகளுக்கு முகத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியுள்ளார். பின்னர் குழந்தை புனர்விகா வாயில் குங்குமத்தைத் திணித்துள்ளார். இதில் குழந்தை மயங்கி விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்து குழந்தையைத் தந்தை நரபலி கொடுத்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in