கடன் வசூலிப்பில் கீழ்த்தரமாக நடந்தால் கடும் நடவடிக்கை.. ஆர்பிஐ எச்சரிக்கை !!
மும்பையில் பொருளாதார கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்துவிட்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுவாக உள்ளதாகவும் நிலைமை மோசமாகிவிடவில்லை என்றும் தெரிவித்தார்.
வட்டி விகிதங்களை உயர்த்தினால் மட்டும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துவிடாது எனக் கூறிய சக்தி காந்த தாஸ், கடுமையான கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஆபத்தான நிலைக்குதான் கொண்டு செல்லும் என தெரிவித்தார்.
தற்போதைய சில்லரை வர்த்தக பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியிருப்பதற்கு உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்தான் முக்கியக் காரணம். சில நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கொடுத்த கடனை வசூலிக்க ஏஜென்ட்டுகள் மூலம் கடுமையான, கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறிய, சக்திகாந்த தாஸ் இதுபோன்ற செயல்களால் அந்த நிதிநிறுவனங்களின் நற்பெயர்தான் கெடும் என்று கூறினார்.
கடனை கேட்டு வாடிக்கையாளர்களுக்கு இரவு தூங்கும் நேரத்தில் போன் செய்வது, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது போன்ற கடன் வசூலிப்பு ஏஜென்டுகளின் செயல்களை ரிசர்வ் வங்கி பொறுத்துக்கொண்டிருக்காது. அது போன்ற செயல்களை ஊக்குவிக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், கடன் செயலிகளை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கடன்களை வழங்குவதை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி விரைவில் விதிமுறைகளை வெளியிடும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார்.
newstm.in