பள்ளிகளின் பாடவேளை நேரம் மாற்றி அமைப்பு.. அரசு அதிரடி உத்தரவு..!
ஒடிசா மாநிலத்தில் எப்போதும் புயல், கனமழை காலங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலில், தற்போது கோடை வெப்பமும் சேர்ந்து தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது. இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களை மூடும்படி ஒடிசா அரசு உத்தரவிட்டு இருந்தது.
எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் இதுபற்றிய அறிவிப்பில் அரசு தெரிவித்தது.
இதேபோன்று, ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வெப்ப அலையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே 2-ம் தேதி (இன்று) வரையான 6 நாட்களுக்கு உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர்நிலைக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிசாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
ஒடிசா முழுவதும் காணப்படும் தீவிர வெப்ப அலையை முன்னிட்டு மாணவ - மாணவியரின் சுகாதார நலன்களுக்காக பள்ளிக்கூடங்களின் பாடவேளை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.