இனி, வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி இல்லை..!
கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்.
இங்கு உள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள ஆறாவது மலைகளை கடந்து, ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக காட்சிதரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த மலைப்பகுதியில் கோடை காலத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், மே மாதம் முதல் இங்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.