நெல்லை பெண் எஸ்ஐக்கு கத்திக்குத்து.. குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்..!
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி இரவு அம்மன் கோவில் கொடை விழாவின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்ஐ மார்க்கரேட் திரேஷாவை, ஆறுமுகம் என்பவர் திடீரென கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைப் பதிவு செய்தது மார்க்கரேட் திரேஷாதான் என்று கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பெண் எஸ்ஐ மார்கரெட் தெரேசாவை கத்தியால் குத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட ஆறுமுகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆறுமுகம் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சுத்தமல்லி காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.