பப்ஜி மதன் மீதான குண்டாஸ் ரத்து.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
பப்ஜி மதன் நடத்தும் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பப்ஜி மதன் தலைமறைவான நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி, சேலத்தில் பதுங்கி இருந்த பப்ஜி மதன் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பப்ஜி மதன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. பப்ஜி மதன் மீதான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். ஆனால், இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, பப்ஜி மதன் மனுவை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.