வேதனையுடன் விலகுகிறேன்.. பிரபல விக்கெட் கீப்பர் அறிவிப்பு..!
மும்பையைச் சேர்ந்தவர் ஆதித்ய தரே (34). இவர் 2009 முதல், 80 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான ஆதித்ய தரே, முதல்தர கிரிக்கெட்டில் 9 சதங்கள் எடுத்துள்ளார்.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 2 அரை சதங்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக காலிறுதி வரைக்கும் மட்டுமே விளையாடினார்.
மும்பை அணி கடைசியாக ரஞ்சி கோப்பையை வென்றபோது ஆதித்ய தரே கேப்டனாக இருந்தார். எனினும், அடுத்த பருவத்துக்கான மும்பை அணியின் வீரர்கள் பட்டியலில் ஆதித்ய தரே இடம்பெறவில்லை.
இந்நிலையில், மும்பை அணியின் திட்டங்களில் தன்னுடைய பெயர் இல்லாததால் தற்போது அவர் உத்தரகண்ட் அணிக்கு மாறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “மும்பை அணியில் இருந்து விலகுவதை என்னால் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. மும்பை வீரராக மிகவும் பெருமிதத்துடன் விளையாடினேன்.
நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த விவகாரம் முடிந்த விதம் எனக்கு வேதனையை அளித்தது. எனினும், புதிய சவாலுக்கு தயாராக உள்ளேன்”என்றார்.
அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லேட், தற்போது ஆதித்யா தரே என மூன்று வீரர்கள் மும்பை அணியை விட்டு மற்ற அணிகளுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.