1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி, 16 மணி நேரம் பூங்காக்கள் திறந்திருக்கும்..!

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி, 16 மணி நேரம் பூங்காக்கள் திறந்திருக்கும்..!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 500 க்கும் அதிகமான பூங்காக்கள் உள்ளன. தற்போது இந்தப் பூங்காக்கள், காலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

பூங்காக்களின் பராமரிப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சில இடங்களில் பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அத்துடன், சரியான நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களின் திறப்பு நேரம் தொடர்பான தகவலை கேட்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘மக்கள் பணி நிமித்தமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுத்துக்கொள்ள இடம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலையில் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடி இருப்பது சரியானது அல்ல.

எனவே, பூங்காக்களை எப்போது திறக்க வேண்டும், எப்போது மூட வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக பூங்கா துறை கண்காணிப்பு பொறியாளர் அனுப்பிவைக்க வேண்டும். இதன் நகலை ஆணையத்திற்கும், மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ‘சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் இனி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும்’ என்று, அனைத்து மண்டலங்களுக்கும் மாநகராட்சி பூங்கா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like