பெரும் பரபரப்பு.. கோவில் திருவிழாவில் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு
நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதனையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவும் பாதுகாப்பு பணியில் இருந்தார். இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த ஆறுமுகம் என்ற நபர், உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தனக்கு அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை தாக்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் அறுத்து காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆய்வாளரை மீட்டு உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காவலரை தாக்கிய ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in