கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை விடுதியில் உணவு உட்கொண்ட மாணவிகள் 9 பேருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவிகள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு ஒவ்வாமை காரணமாக மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தியெடுத்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.