பரபரப்பு! முதல்வர் வீடு அருகே பதுங்கி இருந்த கொலை குற்றவாளி!!
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனின் குடியிருப்பு அருகே பதுங்கிய கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தொண்டராக இருந்த புன்னோல் ஹரிதாசன் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் நிஜில் தாஸ் (38) என்பவர் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டரான இவரை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவின் வடக்கே பினராயி என்ற இடத்தில் பாண்டியாலமுக்கு என்ற பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிஜிலை போலீசார் கைது செய்தனர்.
அது வளைகுடா நாட்டில் வேலை செய்து வரும் பிரசாந்த் என்பவரின் வீடு. பிரசாந்தின் மனைவி பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் கொலை குற்றவாளியை தங்க வைத்ததற்காக ரேஷ்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் புன்னோல் ஹரிதாசன் கொல்லப்பட்ட பின்னர் நிஜில் தப்பியோடி விட்டார். பல இடங்களில் தலைமறைவாக இருந்து வந்த அவர், ரேஷ்மாவை தொடர்பு கொண்டு தங்குவதற்கு நிரந்தர இடம் வேண்டும் என கேட்டுள்ளார்.
கடந்த 17ஆம் தேதியில் இருந்து பினராயி பகுதியில் நிஜில் தங்கியிருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடானது, முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கியுள்ள வீட்டின் அருகே அமைந்துள்ளது. இது, சி.பி.ஐ.(எம்) கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in