பாஜக வழக்கறிஞரின் தொடர் மிரட்டலால் பொறியாளர் தற்கொலை!?
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே இரண்டு துண்டாக சிதறிக் கிடந்த சடலம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞர் பாப்பான்குளம் அருகே உள்ள ஏபி நாடனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுரேஷ் என்ற சுப்பிரமணியன்.
பாவூர்சத்திரம் செல்வ விநாயகபுரத்தில் குடியிருந்து வசித்து வந்த இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. சுப்பிரமணியன் காரில் வெளியே சென்றுள்ளார்.
அவர் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே காரை நிறுத்திவிட்டு பாலருவி எக்ஸ்பிரஸ் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் செல்போனில் இருந்து வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.
அதில் தனது மனைவிக்கு ஒரு பதிவை செய்துள்ளார். குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் என சொல்லிக் கொள்ளும் ராமலிங்கம், சரவணன் ராஜ் ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக அதில் கூறியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in