1. Home
  2. தமிழ்நாடு

இனிமே இப்படி பேசக்கூடாது.. கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

இனிமே இப்படி பேசக்கூடாது.. கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட்டும், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த மாதம் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறுப்பை தூண்டும் வகையில் பேசியுள்ளதால் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘விசாரணை அதிகாரி முன்பு 4 வார காலத்திற்கு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்’ என நிபந்தனை விதித்து, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like