தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு..! விரைவில் சீமான் கைதாக வாய்ப்பு..!

வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார் சீமான்.
சீமானின் இந்த பேட்டி சர்ச்சையானநிலையில், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் கரூர் மண்டல செயலாளர் சசிகுமாரின் கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பங்கேற்றிருந்த சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பற்றிய தன்னுடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளது.
சீமான் மீது சட்டரீதியாக கைது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட வல்லுனர்களின் கருத்துகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீமான் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.