1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 500 நவீன கேமராக்கள்..! இனி திருடு போகும் வாகனங்களை கண்டுபிடிப்பது ஈஸி..!

1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் கை கொடுக்கும் என காவல்துறை கருதியது.

ஆனால் கேமராக்களில் பதிவான காட்சிகள் சிலரால் முறைகேடாக கையாளப்பட்டது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் நிலையங்களில் நடக்கும் பல்வேறு வகையான அத்துமீறல்களை கண்காணிக்க போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் நிஜாமுதின் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

திங்கள்கிழமை மனு மீதான விசாரணையின்போது தமிழகம் முழுவதும் உள்ள 1,500க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் 99 விழுக்காடு நிலையங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பதிவுகள் முறையாக பத்திரப்படுத்தப்படுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் திருடு போகும் வாகனங்களை கண்டுபிடிக்க ஏதுவாக சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் 500 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாகனத் திருட்டை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும் போலீஸார் புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளனர்.

வாகனங்கள் திருடப்பட்டால் சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்புத் துலக்குவார்கள். ஆனால், சில நேரங்களில் வாகன திருடு நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமரா இருப்பதில்லை.

சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் அவை பழுதடைந்திருக்கும். இதனால், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்கு சவாலாக இருக்கும். இது போன்ற சூழலில் பழைய குற்றவாளிகள் யாரேனும் பிடிபட்டு, அவர்கள் தகவல் கொடுத்தால் மட்டுமே திருடுபோன வாகனங்கள் மற்றும் அதை திருடியவர்கள் குறித்த தகவல் வெளியாகும். இதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

இதற்கு மாற்று ஏற்பாடாக, தற்போது இரவு நேரங்களில் போலீஸார் நடமாடும் நவீன கேமராக்களை வாகன சோதனையின்போது பயன்படுத்துகின்றனர். இந்த கேமராக்கள் சாலை சந்திப்புகளில் வைக்கப்படும். இதைக் கடந்து செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை இதில் உள்ள கேமரா படம் பிடிக்கும். ஏற்கெனவே திருடுபோய், அது தொடர்பாக புகார் தெரிவித்து இருந்தால் அந்த வாகனம் குறித்து நடமாடும் நவீன கேமரா போலீஸாருக்கு எச்சரிக்கை செய்யும். இதுவும் போலீஸாருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இதையடுத்து அடுத்த கட்ட முயற்சியை சென்னை போலீஸார் கையிலெடுத்துள்ளனர்.

 தற்போது போலீஸார் 500 இடங்களில் நவீன கேமராக்களையும் முக்கிய சாலை சந்திப்புகள், பிரதான பகுதிகளில் வைத்துள்ளனர். இதில் ஏற்கெனவே சென்னையில் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்ட வாகனங்களின் எண்கள் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும்.திருடு போன வாகனங்கள் அந்தச் சாலை சந்திப்புகளின் வழி சென்றால் நவீன கேமராக்கள் அந்த வாகனத்தை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும். இதனால் குற்றவாளிகள் பிடிபடும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என காவல்துறை கூறுகிறது.

Trending News

Latest News

You May Like