மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் உள்ள ஜகதீஷ்பூர் சைனோ அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அனைவருக்கும் வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஜகதீஷ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெகதீஷ்பூர் பிடிஓ ரகுநந்தன் ஆனந்த் கூறும்போது, “பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். காய்கறிகள் சமைக்கும் போது அதில் பல்லி விழுந்ததாக மாணவர்கள் கூறினர். நாங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளோம்” என்றார்.
மேலும், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. சோதனை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சமையல்காரருக்கு எதிராக துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது மாணவர்கள் நலமுடன் உள்ளனர் என்று கூறினார்.