சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை.. மாநகராட்சி அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளுக்கான சொத்து வரி 25 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. இது, மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இந்நிலையில், மக்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி நூதன முறையை கையாண்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் 15-ம் தேதிக்குள் சொத்து வரி கட்டினால் அவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உங்களுடைய சொத்து வரியை செலுத்தி 5 சதவீத தொகையை சலுகையாக பெற ஏப்ரல் 15-ம் தேதி கடைசி நாள். வரும் 15-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தத் தவறினால் 2% அபராதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
சொத்து வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை ஆப், பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது.