1. Home
  2. தமிழ்நாடு

போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம்: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்..!

1

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குருப் – 1, 2A, 3, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில், 2021ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது.  அதில்,  அரசுப் பணிகளுக்கு நடைபெறும் தோ்வில்,  தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் மொழித்தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என 2021 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில்,  தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

இதனையடுத்து, இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும்,  தமிழ் மொழித் தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு,  திறனறிவு தோ்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உட்பட10 விண்ணப்பதாரா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.  இருதரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்,  “விண்ணப்பதாரா்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

குரூப் 4 பதவிகளை வகிப்பவா்கள்,  மக்களுடன் நேரடியாகத் தொடா்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசுத் தரப்பு வாதம் சரியானது தான்.  தமிழ் மொழித் தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர,  நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை.  அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like