மூடநம்பிக்கையால் பறிபோன 4 உயிர்கள்..!
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சிவனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். திருவண்ணாமலைக்குச் சென்றாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் பெளர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலமாக வந்து செல்வார்கள்.
வெளி மாவட்டடங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையைச் சுற்றி ஏராளமான விடுதிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிரிவலப்பாதையில் சூரியலிங்கம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பயந்துபோன ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 ஆண், 2 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 4 பேரின் சடலங்களுக்கு அருகே சயனைடு பாட்டில் இருந்துள்ளது. இதனால் அந்த 4 பேரும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, 4 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் அந்த 4 பேரும், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், 48 வயது மதிக்கத்த தாய், அவரது 17 வயது மகன், 15 வயது மகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நேற்று ஆன்லைன் மூலம் அறையை முன்பதிவு செய்து வந்து தங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த கடிதம் மற்றும் தற்கொலை குறித்து செல்போனில் பதிவு செய்த வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த குறிப்பில், 4 பேரும் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டு இறைவனை தேடிச் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.