4ம் வகுப்பு மாணவன் கம்பியால் அடித்து கொலை: ஆசிரியருக்கு போலீஸ் வலை..!
கர்நாடக மாநிலத்தில், நான்காம் வகுப்பு மாணவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான பள்ளி ஒப்பந்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் கடாக் மாவட்டம் நர்குண்ட் தாலுகாவுக்கு உட்பட்ட ஹாட்லி கிராமத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 'முத்தப்பா ஹடகாலி என்ற அந்த ஒப்பந்த ஆசிரியர், 10 வயது மாணவரான பரத் என்பவரை இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கியதோடு, பள்ளி கட்டடத்தின் முதல் தளத்திலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார்.
இதனைத் தடுக்க வந்த மாணவரின் தாயும், சக ஆசிரியையுமான கீதா பரகெரா, மற்றொரு ஆசிரியர் நங்கன்கெளடா பாட்டீல் ஆகியோரையும் முத்தப்பா கடுமையாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஆசிரியரின் இந்த வெறிச்செயலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தலைமறைவான அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.