1. Home
  2. தமிழ்நாடு

30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு க ஸ்டாலின்..!!

30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு க ஸ்டாலின்..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த மே 18-ம் தேதி பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு க ஸ்டாலின்..!!

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து - இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்.பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிலிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.


30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு க ஸ்டாலின்..!!



திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்குபோதும் – ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது.

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம். மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம்.

இந்நிலையில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது.

அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.


Trending News

Latest News

You May Like