வங்கிகளில் 3 மாத EMI சலுகை , வெறும் அறிவிப்பு மட்டும் தான் !! விக்ரமராஜா ஆவேசம்
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் யாராலும் பணிக்கு செல்ல முடியவில்லை. இதற்காக மத்திய அரசு அறிவிப்பு சிலவற்றை வெளியிட்டது , அதில் ,
வங்கிகளில் லோன் வாங்கியவர்கள் 3 மாதம் பணம் செலுத்த வேண்டாம். 3 மாத இ.எம்.ஐ - யை பின்பு செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல வங்கிகள் இ.எம்.ஐ பணத்தை கட்ட வேண்டும் என மக்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் குழப்பமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;
மத்திய நிதியமைச்சர் ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாதத் தவணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதை எந்த வங்கியும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. வங்கிகள் வியாபாரிகளின் கணக்கில் உள்ள பணத்தை பிடித்தம் செய்கின்றன. தொடர்ந்து பணத்தை செலுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.
மூன்று மாத சலுகையை சுட்டிக் காட்டினால் தவணைக்கும் தனியாக வட்டி செலுத்த வேண்டும். எனவே நீங்கள் மாதத் தவணையை செலுத்துங்கள் என கிட்டத்தட்ட அச்சுறுத்துகின்றன. அப்புறம் எதற்காக வெற்று அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் செய்யும் பணிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல வியாபாரிகளின் பங்கும். எனவே அவர்களுக்கான சலுகைகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Newstm.in